கண் பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு அவசரமாக 2 விடுதிகள் திறப்பு!

21.08.2026 14:49:47

யாழ்ப்பாணத்தில் ஆலயம் ஒன்றில் பயன்படுத்தப்பட்ட கடுமையான ஒளியூட்டல் காரணமாகவும் பட்டாசு வெடித்ததன் காரணமாகவும் ஏற்பட்ட கண் பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக, இதுவரை 157 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    

 

அனுமதிக்கப்பட்டவர்களில் 58 ஆண்கள், 44 பெண்கள் மற்றும் 55 குழந்தைகள் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, அவர்களை தங்க வைப்பதற்காக மேலதிகமாக இரண்டு விடுதிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பலருக்கு கண்களில் கடுமையான வலி, எரிவு மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலர் சிகிச்சைக்காக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான போதிய வைத்திய வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது சேர்க்கப்பட்டுள்ள அனைவருக்கும் ஆரம்பகட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், கண் சத்திர சிகிச்சை நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் மேலதிக ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், நோயாளர்களுக்குத் தேவையான மருந்துகள், உணவு மற்றும் படுக்கை வசதிகள் போதுமான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வீடுகளில் இருப்பவர்கள் தாமதிக்காமல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலை பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

தேவை ஏற்படும் பட்சத்தில் இரவு நேரங்களிலும் கண் சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்து சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.