உலகின் கவனத்தை ஈர்த்த கண்ணிவெடி அகற்றும் திட்டம்!

11.08.2026 09:07:00

விருது பெற்ற ஹொலிவுட் நடிகையும், சர்வதேச கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கான தூதருமான ரோசமண்ட் பைக், இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டத்தின் முன்னேற்றத்தை பாராட்டியுள்ளார்.

 

வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்கவை ஆகஸ்ட் 10 ஆம் திகதி சந்தித்தபோது, நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடிய அவர், இத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக கண்ணிவெடிகள் காணப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சுமார் 90 சதவீத நிலப்பரப்புகள் வெற்றிகரமாக சுத்திகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சுமார் 20.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதிகள் மட்டுமே அகற்றப்பட வேண்டியுள்ளன. 

இவை பெரும்பாலும் சிக்கலான மற்றும் கடினமான நிலப்பரப்புகளாக இருப்பதாகவும், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இலங்கையை முழுமையாக கண்ணிவெடி இல்லாத நாடாக அறிவிப்பதே இலக்காக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக விசேட பயிற்சி பெற்ற 500 இலங்கை இராணுவ வீரர்களை கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இராணுவம் ஆண்டுதோறும் சுமார் 1.5 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை சுத்திகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.