
அவுஸ்திரேலிய துணைப் பிரதமர் இலங்கை விஜயம்!
அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் நாளை (03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விஜயத்தின் போது, துணைப் பிரதமர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருகை தரவுள்ள அமைச்சரை கௌரவிக்கும் வகையில், ஆஸ்திரேலிய உத்தியோகபூர்வ இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, சிறப்பு மதிய விருந்துபசாரத்தில், பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளும் பிரதமரும், பேராசிரியருமான ஹரிணி அமரசூரியவையும் அவர் சந்திக்கவுள்ளார்.
துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகரவுடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.
இவ்விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறைசார் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையும், ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
துணைப் பிரதமருடன் பிரதமர் அலுவலகம், பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் ஆஸ்திரேலியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள் வருகைதரவுள்ளனர்.