
'எல்லோருக்கும் தீபாவளி, ஆனா எங்கள் வாழ்க்கை நரகமாகி போச்சு'.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்குத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 13 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். |
இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் முனைப்பில் போலீசார் அங்குக் குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர். இத்தகைய சூழலில் தான் போராட்டம் நடத்த அனுமதி கோரி தூய்மை பணியாளர்கள் சார்பில் காவல் துறையிடம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியது. அதாவது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியது. இந்நிலையில் தான் தற்போது 5 மற்றும் 6வது மண்டலத்தைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் பில்டிங் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அதாவது இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அங்குப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். எனவே போராட்டம் நடத்த முயன்ற தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்து அங்கிருந்து வேனில் குண்டுக்கட்டாக அழைத்து செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ''எல்லோருக்கும் பொங்கல், போகி, தீபாவளி இருக்கு. ஆனா எங்கள் வாழ்க்கை நரகமாகி போயிடுச்சு. நரகத்தில் தள்ளிவிட்டார்கள்'' என கதறினர். |