உடனடியாக வெளியேறுவதே உசிதமானது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாம் கூறும் வரை காத்திருக்காமல் உடனடியாக வெளியேறுவதே உசிதமானது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார். |
விரைவில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட சகல முன்னாள் ஜனாதிபதிகளதும் உத்தியோகபூர்வ இல்லங்கள் குறித்த மதிப்பாய்வு முன்னெடுக்கப்படும். 1986ஆம் ஆண்டு 4ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைகள் குறித்த சட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வன் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது அவர் திருமணம் செய்து கொண்டவருக்கு உத்தியோகபூர்வமாக இல்லமொன்று வழங்கப்படாத சந்தர்ப்பத்தில் அவர்கள் வசிக்கும் அரசாங்கத்துக்கு சொந்தமான இல்லத்துக்கு அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையில் மூன்றில் ஒரு பங்கினை செலுத்த வேண்டும் என்று குறித்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நாம் கூறும் வரை காத்திருக்காமல் அவர் வெளியேறத்தான் வேண்டும். அவ்வாறில்லை என்றால் குறித்த இல்லத்துக்கான வாடகையை செலுத்தி அங்கு வசிக்கவும் முடியும். அதனை விட அவருக்கு வளர்ந்த புதல்வர்கள் மூவர் இருப்பதால் அவர்கள் அவரைப் பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணுகின்றோம். இந்த சட்டம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரமின்றி சகல முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பொறுந்தும். அரசியல்வாதிகளின் சிறப்புரிமைகளை நீக்கி, அவர்களால் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை குறைப்பதற்கான ஆணையே எமக்கு கிடைத்திருக்கின்றது என்றார். |