அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு: கலங்கும் நடுத்தர மக்கள்!

01.04.2026 08:12:27

தமிழகத்தில் வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளீர்களா? அல்லது நிலம் வாங்கியும் இன்னும் பத்திரப்பதிவு செய்யாமல் இருக்கிறீர்களா? ஏப்ரல் 1-ம் தேதி, இன்று முதல் சொத்து பதிவு தொடர்பான விதிகள் மாறவுள்ளது. அதாவது சொத்து பதிவிற்கான செலவு அதிகரிக்கிறது. இதனால் நடுத்தர மக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பர் என தெரிகிறது. தமிழகத் தேர்தல் 2026 தொடர்பான அனைத்து அப்டேட்களும் ஒன்இந்தியா-வில் இன்று முதல் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, முத்திரைத் தீர்வை (stamp duty) விகிதங்கள் திருத்தப்பட உள்ளன.

பல ஆண்டுகளாக மாற்றப்படாத வழிகாட்டி மதிப்பை சந்தை விலைக்கு இணையாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதால், சொத்து பரிமாற்றத்திற்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். ஆகவே, மார்ச் 31-க்குள் பத்திரப்பதிவை முடிப்பவர்களுக்கு பழைய கட்டணமே பொருந்தும். ஏப்ரல் 1-க்குப் பிறகு பதிவு செய்வோர் புதிய, உயர்த்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின்படி முத்திரைத் தீர்வை செலுத்த வேண்டும். இம்மாற்றம் சாதாரண நடுத்தரக் குடும்பங்களுக்கு கணிசமான சுமையாக அமையும். பட்டா மாறுதல் தொடர்பான ஆன்லைன் நடைமுறைகள் இன்று முதல் எளிமையாக்கப்படுகின்றன. பத்திரப்பதிவு முடிந்தவுடன் தானியங்கி முறையில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகமாகிறது.

இது செயல்முறையை விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பழைய வில்லங்கச் சான்றிதழில் (EC) பிழைகள் இருப்பின், தானியங்கி சேவை பலனளிக்காது. எனவே, சொத்து விவரங்கள் கணினியில் சரியாக உள்ளதா என்பதை மார்ச் 31 ஆம் தேதிக்குள் சரிபார்த்துக் கொள்ள நிபுணர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இல்லாவிட்டால் வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய சூழல் ஏற்படலாம். மேலும், ஏப்ரல் 1 முதல் அங்கீகாரமற்ற மற்றும் வரன்முறைப்படுத்தப்படாத இடங்களை விற்பனை செய்வதில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலாகின்றன.

DTCP அல்லது CMDA அங்கீகாரம் இல்லாத மனைகளைப் பதிவு செய்ய, சார் பதிவாளர் அலுவலகங்களில் கடுமையான கெடுபிடிகள் இருக்கும். குறைந்த விலையால் ஈர்க்கப்பட்டு அங்கீகாரமற்ற மனைகளை வாங்காமல், மார்ச் 31-க்குள் முறையான அங்கீகாரத்தை உறுதி செய்வது அவசியம் என சொல்லப்பட்டது. ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களும், புதிதாக வீடு கட்ட நினைப்பவர்களும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் பத்திரப்பதிவை முடித்து கணிசமான தொகையை மிச்சப்படுத்தினர்.

எலி வலையானாலும் தனி வலை வேண்டும் என்ற சொலவடைக்கேற்ப மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் எப்படியாவது ஒரு குடிசை வீட்டையாவது வாங்கி விட வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார்கள். ஏற்கெனவே வீடு விலை போக பத்திரப்பதிவு என சில லட்சங்களை செலவு செய்கிறார்கள். அப்படியிருக்கும் போது தற்போது புதிய விதிகளால் பத்திரப்பதிவு செலவு அதிகரிக்கும். இதனால் நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவில் மண் விழுமா என்ற அச்சம் நிலவுகிறது.