முதல் குடைச்சல் கொடுக்கும் விசிக.

25.06.2026 07:58:34

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கும் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். 

தவெகவின் தேர்தல் வாக்குறுதியான இத்திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், இதற்காக ஆண்டுக்கு ரூ.755 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திருமாவளவன், தமிழ்நாட்டில் தற்போது 56 சதவீத குழந்தை பிறப்புகள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் நடப்பதாக குறிப்பிட்டுள்ளார். தனியார் மருத்துவமனைகளில் பிரசவ கட்டணம் மிக அதிகமாக இருந்தாலும், ஏழை எளிய மக்கள் கூட தாய்-சேய் பாதுகாப்பை கருதி அவற்றையே நாடுகின்றனர். எனவே, தங்க மோதிரத்திற்காக செலவிடப்படும் இந்த ரூ.755 கோடியை கொண்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான உயரிய வசதிகளுடன் கூடிய பிரசவ வார்டுகளை உருவாக்குவதுடன், தேவையான மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பிறந்த குழந்தைக்கு போடப்படும் தங்க மோதிரம் சில மாதங்களிலேயே கைகளுக்கு பொருந்தாமல் போய்விடும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆடம்பர திட்டங்களுக்கு பதிலாக மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதே ஒட்டுமொத்த மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதால் அரசு இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.