சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் அனுமதிப் பத்திரங்கள் பரிசோதனை

27.09.2021 05:58:25

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தினால் விநியோகிக்கப்படும் அனுமதி பத்திரங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ளன.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், தெற்காசிய நாடுகளில் இலங்கைக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று தொடர்பான உறுதிபடுத்தப்பட்ட ஆவணமாக இந்த அனுமதி பத்திரம் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசி செயலியின் ஊடான இந்த அனுமதி பத்திரத்தில், கொவிட்-19 தொற்று மற்றும் கடவுச்சீட்டு விபரங்களை இலகுவாக பெறமுடியும் என ஸ்ரீ லங்கன் விமானசேவை தெரிவித்துள்ளது.