வடக்கு, கிழக்கில் நுண் கடன் நிதி நிறுவனங்களால் மரணங்கள் இல்லை!
|
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நுண் கடன் நிதி நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்று எந்தவித அறிக்கைகளும் இல்லையென என நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.
|
|
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம் பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் உள்ள அரச மற்றும் தனியார் துறை வங்கிகள்,காப்புறுதி, நுண் நிதி மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள், அரச மற்றும் தனியார் துறை வங்கிகள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும் போது அறவிடும் வட்டி வீதம் தொடர்பில் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பி இருந்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நுண் நிதி நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் காரணமாக நபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதை அமைச்சர் அறிவாரா என்பதையும் அவ்வாறாயின், தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்திற்கு அமைவாக வெவ்வேறாக எத்தனை என்பதையும் அவர்களின் மரணங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பது தொடர்பிலும் கேள்வியெழுப்பினார். இதற்கு நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் பெர்னாண்டோ பதிலளிக்கையில், வடக்கு மாகாணத்தில் 28 அரச வங்கிகளும், 38 தனியார் வங்கிகளும், 78 நிதி நிறுவனங்களும், 13 அனுமதி பெற்ற நுண்கடன் நிதி நிறுவனங்களும் உள்ளன.அரச மற்றும் தனியார் வங்கிகள் கடன் வழங்கும் போது அறவிடப்படும் வட்டி வீதங்கள் இலங்கை மத்திய வங்கியின் தீர்மானத்துக்கு அமைய செயற்படுத்தப்படுகின்றன. 2025 செப்டெம்பர் மாத காலப்பகுதியில் அனுமதி பெற்ற நுண்கடன் நிதி நிறுவனங்கள் 22.69 முதல் 39.40 சதவீத அடிப்படையில் வருடாந்த வட்டி வீதத்துக்கமைய கடன் வழங்குகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நுண் கடன் நிதி நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்று அறிக்கையிடப்படவில்லை. குறிப்பாக குத்தகை நிறுவனங்கள், மற்றும் நுண்கடன் நிறுவனங்களை கண்காணிக்கும் பொறுப்பு வங்கிகளுக்கு வழங்கப்படவில்லை.நிதி நிறுவன கண்காணிப்பு திணைக்களத்துக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நுண்கடன் கண்காணித்தல் அதிகார சபை தொடர்பான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் அந்த வரைவு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.அதற்கமைய மத்திய வங்கியால் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களை முறையாக கண்காணிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். |