சுரேஷ் சலே விவகாரத்தை அரசியல் பிரச்சினையாக மாற்றுகின்றனர்!

28.06.2026 08:00:00

சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தை தற்போது சில தரப்பினர் அரசியல் பிரச்சினையாக மாற்றி அரசியல் சர்ச்சையாக முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

    

 

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் பரந்த மக்களின் ஆதரவைப் பெற்ற அரசாங்கமாகும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், அதற்கு ஒரே வார்த்தையில் சான்றிதழ் வழங்க முடியாது.

நாட்டில் புதிய அரசியல் சக்தியொன்று உருவாகும் என தாம் நம்பவில்லை. தற்போதுள்ள அரசியல் சக்தியே தொடர்ந்தும் வெளிப்படும். நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் அரசியல் எதிர்பார்ப்புகளுடன் செயற்பட்டு வருகின்ற போதிலும், அவர்களது அரசியல் பயணத்தில் பின்னடைவுகள் ஏற்படலாம்.

நாட்டில் சட்டம் பொதுவாக நல்ல முறையில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. சில சந்தர்ப்பங்களில் தெரிவு செய்யப்பட்ட வகையில் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்தாலும், குற்றவாளிகள், ஊழல்வாதிகள் மற்றும் நாட்டை கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதில் அரசாங்கம் எவ்வித தயக்கமும் காட்டவில்லை.

சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தை தற்போது சில தரப்பினர் அரசியல் பிரச்சினையாக மாற்றி அரசியல் சர்ச்சையாக முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் தற்போது உயிரிழந்துள்ள போதிலும், அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் எஞ்சிய உறுப்பினர்கள் அல்லது ஆதரவளித்தவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சுரேஷ் சலே மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் அவருக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். அவர் உடலளவில் பலவீனமடைந்தால், தமக்கான வழக்கை முன்னெடுத்துச் செல்ல தேவையான ஆற்றலை இழக்க நேரிடும் என்றார்.