நீதியரசர்களின் வயதெல்லையை நினைத்த பிரகாரம் நீடிக்க முடியாது!

14.07.2026 08:58:48

உயர்நீதிமன்றங்களின் நீதியரசர்களின் வயதெல்லையை நினைத்த பிரகாரம் நீடிக்க முடியாது. நீதிமன்ற சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தே மேற்கொள்ள வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்தார்.

    

 

நீதியரசர்களின் வயதெல்லையை நீடிக்க அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஊழல் மோசடியற்ற அரசொன்றை கட்டியெழுப்புவதற்கே மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கியிருக்கிறது. அவ்வாறான அரசொன்றை அமைத்துக்கொள்ளும்போது தானாகவே பொருளாதார பிரச்சினையும் இல்லாமல் போகிறது.

அவ்வாறானதொரு நிலைமைக்கு முக்கியமாக நீதிமன்றங்களின் வழக்குகள் விரைவாக தீர்க்கப்படவேண்டும். அதற்கு நீதிபதிகளின் அறிவு, திறமை அனுபவம் முக்கியமாகும். அதன் பிரகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளை செயற்திறமையுடன் மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து நீதிமன்றங்களின் நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீடிப்பதாக இருந்தால், அரசியலமைப்பின் பிரகாரம் அதனை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் செயற்திறமை தொடர்பில் மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். அதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு அது வழிவகுக்கும்.

அதேநேரம் நீதியரசர்களின் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்றாலும் அரசாங்கம் இறந்த சந்தர்ப்பத்தில், மக்கள் ஆணையின் பிரகாரமே செயற்பட வேண்டும்.

நாட்டுக்குள் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதித்துறையை அபிவிருத்தி செய்து, நீதிமன்ற கட்டமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனால் எதனை செய்வதாக இருந்தாலும் மக்களின் இறையாண்மை முக்கியமாகும். இது தொடர்பில் ஏனைய அமைப்புகளின் கருத்துக்களுக்கும் செவிசாய்த்து, பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு அமைய தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.

யார் என்ன சொன்னாலும் நீதிபதிகளின் வயதெல்லையை நீடிப்பதாக இருந்தால், அதனை அரசியலமைப்பு திருத்தத்துடனே மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அதனால் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள மக்களின் ஆணை முக்கியமாகும். அதனால் பெரும்பான்மை மக்களின் ஆணையுடனே இதனை மேற்கொள்ளும்போது, யாருக்கும் பிரச்சினை ஏற்படப்போவதில்லை.

அதேநேரம் சட்டத்தரணிகளின் சங்கமும் இது தொடர்பில் அவர்களின் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறது. அவர்களின் கருத்துக்களையும் அரசாங்கம் உள்வாங்கிக்கொண்டு, நிதானமாகவே இதனை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும்போது நீதிமன்ற சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.