மிரட்டிய ‘டூரிஸ்ட் பேமிலி’!

20.05.2025 07:05:00

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘குட்னைட்’ மற்றுன் ‘லவ்வர்’ ஆகிய படங்களுக்கு அடுத்தப் படமாக ’டூரிஸ்ட் பேமிலி’ படம் கடந்த மே 1 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்துக்கு ரிலீஸுக்கு முன்பே நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. படம் ரிலீஸாகி ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்த நிலையில் வசூலில் தொடர்ந்து கலக்கி வருகிறது.

முதல் நாளில் 2 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த நிலையில் அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் 2 கோடி ரூபாய்க்குக் குறையாமல் வசூலித்து வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் மட்டும் சுமார் 5 மற்றும் 6 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. அதற்கடுத்த வேலை நாட்களிலும் 2 கோடி ரூபாய்க்குக் குறையாமல் வசூலித்து வருகிறதாம்.

இந்நிலையில் நேற்று மூன்றாவது வார இறுதியில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய் வசூலைத் தொட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒரு சிறு பட்ஜெட் படத்துக்கு பிளாக்பஸ்டர் கலெக்‌ஷன் ஆகும். இதன் மூலம் இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக ‘டூரிஸ்ட் பேமிலி’ இடம்பெற்றுள்ளது.