ரணிலின் நாளைய அனைத்துக்கட்சி மாநாட்டுக்கு முன்னர் இனவாத செய்தி

26.01.2023 00:09:00

அதிபர் ரணில் விக்ரமசிங்க, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு தமிழ் சமூகத்தையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதாகக் குறிப்பிட்ட லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, நாளையதினம் இடம்பெறவுள்ள சர்வகட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை பகிர்வதாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதை அதிபர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்தியுள்ளார்.

இனப்பிரச்சினை தீர்வு 

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினை தீர்வு காண்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டதை ஏற்றுக்கொண்டோம்.

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. அதிபர் தலைமையில் கடந்த மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தில் உண்மை நோக்கத்துடன் கலந்துகொண்டோம்.

 

தமிழ் மக்கள் மத்தியில் சமஷ்டி பற்றி கருத்துரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அதிபர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சமஷ்டி தொடர்பில் கருத்துரைக்கவில்லை.

உண்மை நோக்கத்துடன் தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை.

அதிபரின் ஏமாற்று செயற்பாடு

அதிபரின் ரணிலின் ஏமாற்று செயற்பாடுகளில் பங்காளியாகக்கூடாது என்பதால் அதிபர் தலைமையில் நாளை இடம்பெறும் சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை.

 தனது அரசியல் வெற்றிக்காக இனப்பிரச்சினை விவகாரத்தை பயன்படுத்திக்கொள்கிறார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தான் மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத அளவுக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.