அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு- ஓகஸ்ட் 31ஆம் திகதி விசாரணை!

03.07.2026 08:14:02

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, விசாரணைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  

'அபினவ நிவஹல் பெரமுன'வின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனு, நேற்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மஹேன் கோபல்லவ முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி அசோக் பரன், நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து இந்த மனுவை விசாரணைக்கு எடுப்பதற்காக மிக அருகாமையிலான திகதி ஒன்றினை வழங்குமாறு கோரினார்.

எதிர்மனுதாரரான பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்னவும் அந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை .

இதற்கமைய, குறித்த மனு மீதான விசாரணையை ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைப்பதற்கு நீதியரசர் உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்படும் சந்தர்ப்பத்திலும் அவர் அரசாங்க வைத்தியராகப் பணியாற்றி வந்தார் எனவும், அரசியலமைப்பின் விதிகளுக்கு அமைய அரசாங்க ஊழியர் ஒருவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்படுவது சட்டத்திற்கு முரணானதுடன், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கான தகைமையீனமாகும் என்றும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.