மகாராணி இரண்டாம் எலிசபெதின் இறுதிச் சடங்கு..! ட்ரம்பை ஒதுக்கிய பிரித்தானியா

14.09.2022 10:05:47

இறுதிச் சடங்கு

லண்டனில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

பாரம்பரியத்தில் இருந்து விலகி மகாராணியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முன்னாள் அமெரிக்க அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய நாட்டு தலைவர்கள் மற்றும் அவரது பாரியார் அல்லது இணைந்து வாழ்பவர்களுக்கு மட்டுமே மகாராணியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளும் கவுரவம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் மற்றும் பெண்மணிக்கு மட்டுமே அழைப்பு

மகாராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அழைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்றுக்கொண்டதாக வெள்ளை மாளிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

ஆனால் இந்த அழைப்பு அதிபர் மற்றும் பெண்மணிக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19ஆம் திகதி வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் நடைபெறவுள்ள மகாராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் உலகெங்கிலுமுள்ள அதிபர்கள் பிரதமர்கள் மன்னர்கள் மற்றும் இராணிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முடிசூட்டு விழா தேவாலயத்தில் இறுதிச் சடங்கு

வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் தான் மகாராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக முடிசூட்டு விழா 1953 ஆம் ஆண்டு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதே தேவாலயத்தில் மகாராணியின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.