
பொற்கோயிலை குறிவைத்த பாகிஸ்தான்.
மே 8 அன்று பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் குறிவைத்தது என்ற அதிர்ச்சித் தகவலை இந்திய 15 ஆவது காலாட்படை பிரிவின் பொது அதிகாரி (GOC) மேஜர் ஜெனரல் கார்த்திக் சி சேஷாத்ரி திங்களன்று (19) வெளியிட்டார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டது.
எனினும், இராணுவ வான் பாதுகாப்பு பீரங்கிகள் பொற்கோயிலை குறிவைத்து தாக்கப்பட்ட அனைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் இராணுவத்திற்கு எந்த முறையான இலக்குகளும் இல்லை என்பதை அறிந்திருந்தும், அவர்கள் இந்திய இராணுவ நிறுவல்கள், மத இடங்கள் உட்பட பொதுமக்கள் இலக்குகளை குறிவைப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்.
இவற்றில், அமிர்தசரஸில் உள்ள பெற்கோயில் மிக முக்கியமானதாகத் தோன்றியது.
பெற்கோயிலுக்கு முழுமையான வான் பாதுகாப்பு குடையை வழங்க மேலதிக நவீன வான் பாதுகாப்பு ஏற்பாடுகளை நாங்கள் ஏற்படுத்தினோம்.
இதனால், பொற்கோயிலை குறிவைத்த அனைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தினோம்.
இதனால் நமது புனித பொற்கோயிலில் ஒரு கீறல் கூட ஏற்பட அனுமதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, எல்-70 வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் உள்ளிட்ட இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலையும் பஞ்சாப் நகரங்களையும் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களிலிருந்து எவ்வாறு காப்பாற்றின என்பதற்கான ஒரு செயல் விளக்கத்தை இராணுவம் திங்களன்று காட்சிப்படுத்தியது.