வரிகள் குறைப்பு

31.03.2024 09:22:20

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

அதன்படி, மார்ச் 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், 10 சதவீத வரியை 6 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் சீமெந்து, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் மற்றும் குழந்தைகள் பால்மா ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலை உபகரணங்கள், எழுதுபொருட்கள், ஆடைகளுக்கான மூலப்பொருட்கள், மோட்டார் மற்றும் சைக்கிள் உட்பட வாகன உதிரிப்பாகங்கள் ஆகியவற்றுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி 10 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள், மின்சார உபகரணங்கள், குளியலறை உபகரணங்கள், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக், அலுமினியம் மற்றும் மரப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளை திருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.