முதல் தெற்காசிய நாடாக இணைந்த இலங்கை!
|
சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் இணையும் முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை மாறவுள்ளது. சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் (Global Charter on Children’s Care Reform) இணைவதற்கான உத்தியோகபூர்வ விருப்பத்தை இலங்கை செவ்வாய்க்கிழமை (17) கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் வைத்து வெளிப்படுத்தியது. |
|
இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், நீதித்துறை அமைச்சரும் (லோர்ட் சான்சலர்) பிரதிப் பிரதமருமான உயர் கௌரவ டேவிட் லம்மி அவர்கள் கலந்துகொண்டார். இலங்கை அரசாங்கத்தின் சார்பில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்களினால் இதற்கான உத்தியோகபூர்வ விருப்பக் கடிதம் கையளிக்கப்பட்டது. இலங்கை நீண்டகாலமாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் பிரகடனத்தில் (UNCRC) ஒரு பங்காளியாக இருந்து வருவதுடன், சர்வதேச சட்டங்களின் கீழ் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. சிறுவர்களுக்கான மாற்றுப் பராமரிப்பு தொடர்பான 2009 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வழிகாட்டுதல்கள், பெற்றோர் பராமரிப்பு அற்ற சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான 2019 பொதுச் சபை தீர்மானம் (A/RES/74/133), 2022 நிறுவனமயமாக்கலை நீக்குதல் தொடர்பான வழிகாட்டுதல்கள் (CRPD/C/5), 2022 கிகலி (Kigali) பிரகடனம் மற்றும் 2024 சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதலாவது உலகளாவிய அமைச்சர்கள் மாநாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உலகளாவிய சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வரை உலகில் 34 நாடுகள் இந்த சாசனத்தை அங்கீகரித்துள்ளன. தெற்காசிய பிராந்தியத்தில் இதுவரை எந்தவொரு நாடும் இந்த சாசனத்தில் இணையாத நிலையில், அதில் இணையும் முதல் தெற்காசிய நாடாக இலங்கை திகழ்கின்றது. |