தமிழ் மொழி பேசும் தலைவர்களே கவனம்.
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஏனைய அமைப்புகளால் நிவாரண உதவிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அவை தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின்றன.
எனினும், பாதிக்கப்பட்ட தமிழ் மொழி பேசுவோர் வாழும் பல பகுதிகளுக்கு எந்த ஒரு நிவாரணமும் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மாலை 5 மணி வரையிலும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இங்கு, இனங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நாங்கள் முன்வைக்கவில்லை. எனினும், நகரங்களிலிருந்து பல கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அரசாங்கம் இதுவரையிலும் கவனிக்கவில்லை என்றும் அதற்கான பொறிமுறையை அவசரமாக ஏற்படுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கோருகின்றனர்.
ஆகக் குறைந்தது,கிராம சேவகர் கூட தங்களுடைய பிரதேசங்களை எட்டி கூட பார்க்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர், எமது அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து வேதனைப்படுகின்றனர்.
ஆகையால், பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பான மிகச் சரியான தகவல்களை பெற்று அந்த மக்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகளை உடனடியாக கிடைப்பதற்கான வழிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என நாமும் உரிய தரப்பினர் கவனத்துக்கு இந்த செய்தியின் ஊடாக கேட்டுக்கொள்கிறோம்.