41 ம் ஆண்டு தமிழ் தேசிய வீரர்கள் தினம்

27.07.2024 09:07:00

வெலிக்கடை சிறைச்சாலையில் 1983ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணி போராளி ஜெகன் உட்பட 53 தமிழ் அரசியல் போராளிகளின் அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்க அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

 

இதன்போது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணி போராளி ஜெகனிற்கு தீபமேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனால் நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் புருஸின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.