“தயவு செய்து இப்போதாவது பிரச்சனை பன்ணுங்க”

23.07.2024 07:09:00

சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக சார்பில் ‘பெரியார் விசன்’ (PERIYAR VISION – Everything for everyone) என்ற ஓடிடி தளம் அறிமுகப் செய்யப்பட்டது. இந்த தளத்தில் சமூக நீதிக் கொள்கைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் தி.க. தலைவர் கி.வீரமணி, தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது சத்யராஜ் பேசுகையில், “இன்றைக்கு உலகம் முழுவதும் மன அழுத்தம், மனச் சோர்வு, கவலை ஆகியவை பெரிய பிரச்சனையாக பேசப்படுகிறது. இதைவைத்து கார்ப்பரேட் சாமிகள் காசு பாத்து வருகின்றனர். அவர்களிடம் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். நீங்க எந்த கார்ப்பரேட் சாமிகளிடமும் போக வேண்டாம். கி.வீரமணியின் வாழ்வியல் சிந்தனை படித்தால் சரியாக போய்விடும்.   

இந்த ஓடிடி இன்றைய காலகட்டத்தில் ரொம்ப முக்கியமானது. சென்சார் போர்டு முத்தமிழறிஞர் கலைஞர் காலத்திலிருந்து பிரச்சனையாக இருக்கிறது. பராசக்தியில் ஆரம்பித்து நான் நடித்துள்ள தோழர் சேகுவேரா வரை பெரிய பிரச்சனை. ஆனால் ஓடிடியில் அப்படி இல்லை. புதிய சிந்தனைகளை சொல்வதற்கு இந்த ஓடிடி தளம் வசதியாக இருக்கிறது. பெரியார் படத்தை தற்போதைய தொழில்நுட்பத்திற்கேற்ப மெருகூட்டி இருப்பதாக சொன்னார்கள். இப்போது வெளியிட்டால் இன்னும் பரபரப்பாக இருக்கும். அப்போது வெளியிடும் போது தியேட்டர் முன்பு கலவரம் வரும் என நினைத்தோம். ஆனால் கலைஞர் முதலமைச்சராக இருந்ததால் எதுவும் நடக்கவில்லை. இப்பவும் அந்தப் பயம் இருக்கிறது. மு.க.ஸ்டாலின் தற்போது முதலமைச்சராக இருக்கிறார். இப்போது வெளியிடும் போதாவது தயவு செய்து பிரச்சனை பன்ணுங்கள். அப்பதான் நல்லாருக்கும். நாங்கள் எதிர்ப்பில் தான் வளருவோம்” எனக் கேட்டுக் கொண்டார்.